Monday 27 April 2015

நெப்போலியன் அழுகிறான்!

(பிரான்சின் தலைமை ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற நெப்போலியன், தான் பிறந்த கோர்சிகாவின் மீதான இத்தாலி ஆக்கிரமிப்பை (இன்றைய இத்தாலியல்ல)முறியடிக்கப் படைதிரட்டி வருகிறான். ஏற்கெனவே நெப்போலியனிடம் தோற்று சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை மறந்த இத்தாலிக்கு மீண்டும் புத்தி புகட்ட ஆரம்பித்தது பிரெஞ்சுப் படை. போரில் என்னவோ படிப்படியாக வெற்றிதான் என்றாலும் அந்த வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் நெப்போலியன் இல்லை. அதற்குக் காரணம் அவனது ஆசைக் காதல் மனைவி ஜோசஃபின். அவள் அவனைவிட 8 ஆண்டுகள் மூத்தவள். 14 வயது ஆண்பிள்ளைக்குத் தாய். கணவன் இறந்தபின் பாதுகாப்புக்கும் பணத்திற்கும் பெரும் புள்ளிகளை வளைத்துப் போட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். முதல் முறை பார்த்த போதே அவள் கட்டழகில் சொக்கிப் போன நெப்போலியன் அவளையே மனைவியாக்கிக் கொண்டான். தனக்கு மனைவியான பிறகும் அவள் பழைய வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தது அவனை ரணமாக்கிக் கொண்டே போனது. விளைவு, போர்வாளைத் தூரம் வைத்துவிட்டுப் போர்க்களத்திலும்கூட அவன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான். பல முறை அவள் மீது கோபம் வந்தும் முற்று முழுதாக அவளைவிட்டு விலக அவனால் இயலவில்லை. அவள் மீது அவனுக்கிருந்த மோகம் அவ்வளவு. அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்தது. ஐரோப்பாவையே தன் வாள்முனையில் பணிய வைத்த அந்த மாவீரனை தன் காலடியில் பணிய வைத்தாள் ஒரு பெண். இன்றும் உண்டு, உலகையே அசைத்துக் காட்டும் வல்லமை பெற்றிருந்தும் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சராசரி ஆசைகளில் கட்டுண்டு கையாலாகாதவர்களாய் கண்ணீர் வடிக்கும எத்தனையோ நெப்போலியன்கள்...)

ஆதிசிவன் கொண்டநெற்றிக்
கண்ணெனவே நானிருந்தேன்
நெற்றிக்கண்ணில் குளிர்காயும் வித்தை-அதில்நீ
நன்கு,கை தேர்ந்தஒரு தத்தை!

சிற்றிடையைத் தீண்டுமொரு
கற்றைக்குழ லாகமனம்
ஒற்றைநொடிப் போதினிலே தொட்டாய்-என்னை
ஓரவிழிப் பார்வையிலே சுட்டாய்!

சேர்த்துவந்த பாவமெனச்
சொல்வதற்கு ஏதுமிலை
பார்த்துவந்த பாவம்மட்டும் உண்டு-பதம்
பார்க்குதடி என்னையது இன்று!

மானமது கெட்டபின்பு
ஞாலமதில் கூடிவரும்
ஞானமெனச் சொல்லுமொரு உண்மை-அது
ஞாபகத்தில் இருந்துஎன்ன நன்மை?

மேகமுள்ள காலம்வரை
வானமழு தாகவேண்டும்
மோகமுள்ள காலமது வரைக்கும்-அடி
மானமுள்ள நெஞ்சுக்கிலை உறக்கம்!

வாசமலர்க் கூந்தலதை
நேசமுடன் கோதுகையில்
பாசக்கயி றாகிஉயிர் வாங்கும்-என்ற
உண்மையினைக் கூறவில்லை யாரும்!

சங்குமுலை காட்டிஅதில்
மகுடியினை வாசித்தாய்
அஞ்சுபுலன் புற்றெனவே கொண்டு-பாம்பாய்
ஆடுதடி ஆசைகுடி வந்து!

தவங்களையே கலைத்துவிளை
யாடுகின்ற காமனவன்
கணைகளுக்கு என்னுடைய தூக்கம்-அதைக்
கலைப்பதற்கா இல்லையொரு மார்க்கம்?

விடியலிலே வந்துதிக்கும்
வைராக்கியம் இருள்வந்து
படிந்துவிட்டால் போகுதடி தொலைந்து-மனம்
பல்லிளித்துச் சாகுதடி அலைந்து!

பஞ்சணையைப் பார்த்துவிட்டால்
அஞ்சுகணை பாய்ந்துவிட்டால்
உயர்திணைதான் யாருமில்லை இங்கு-இந்த
தத்துவத்தின் தலைமகன்நான் இன்று!

இவ்வுலகம் அவ்வுலகம்
என்றுரைக்கும் ஏழுலகும்
ஒன்றுகூடி நின்றதேனும் வெல்வேன்-என்
உள்ளம்பகை யானதென்ன செய்வேன்?

சத்திரத்தில் தூங்குமொரு
சந்நியாசி கண்டசுகம்
சித்திரத்தில் அச்சடித்த பெண்மை-அதன்
சங்கமத்தில் தோன்றவிலை உண்மை!

சாமத்து வெண்ணிலவு
ஈமத்துக் குடம்போல
தோன்றுதடி தலைமாட்டில் வந்து-கண்கள்
தூங்கவிலை தலைவிதியை நொந்து!

வாள்முனையில் வையகத்தை
மண்டியிட வைத்தவன்;பெண்
காலடியில் மண்டியிட்டான் என்று-வரும்
காலமென்னைத் துப்பும்விதி நன்று!

வஞ்சிமகள் வஞ்சமகள்
வளையலிடம் தோற்குமெனில்
வாளென்ன? வீரமென்ன? போடி-என்போல்
வையகத்தில் இல்லையொரு பேடி!

-----------------ரௌத்திரன்

அடியே கேணச் சிறுக்கி!

மனச கெடுக்குறாளே
மயக்கம் கொடுக்குறாளே
சும்மா கெடந்த சங்க
ஊதிக் கெளப்புறாளே!

சிரிச்ச சிரிப்புக்கு
அர்த்தம்தான் புரியலையே
சிறுக்கி மவளுக்கு
எதாச்சு தெரியலையே!

எக்குத் தப்பாக
இன்னிக்கிச் சிரிக்கிறாளே
காத்துக் கருப்பேதும்
உள்ளுக்குப் புகுந்துருச்சோ?

அவள புடிச்ச பேயி
ஆண்டவனே அவளோட
என்னையும் சேத்தில்ல
ஆட்டிப் பாக்குது!

கோழிக் கொழம்புக்கு
கமகமன்னு அரச்சி
அம்மிய வழிப்பாங்களே
அந்தப் படிக்கில்ல,

மிச்ச சொச்சமின்னு
விட்டு வெக்காம
மொத்தமா என்மனச
கண்ணால வழிக்குறா!

இவ,
வெளங்காம பாத்தாலே
வாலு மொளச்சிமனம்
அலங்கா நல்லூரு
காளையா குதிக்குமே,

இப்ப,
வில்லங்கமா இல்ல
வெறிச்சிப் பாக்கறா!
வெவரம் தெரியலையே
வெடவெடன்னு வருதே!

ஆழம் பாக்கறாளோ?
ஆச வந்துருச்சோ?
வேப்ப மரத்துக்கே
வேப்பல அடிக்குறாளே!

ஜல்லிக் கட்டுக் காளையாட்டம்
ஜெகத்தையே சுத்திவந்தேன் -இவ
செக்கு மாடாக்கி
விட்ருவா போலிருக்கே!

கணக்குப் புரியலையே
களிமண்ணு மண்டைக்கு!
மினுக்கு மினுக்குன்னு
மினுக்கிக்கிட்டுப் போறாளே!

கல்லு மனச இவ
கரைக்குறது மட்டுமில்ல
கேப்பக் களியாட்டம்
கிண்டிருவா போலிருக்கே!

எலையத் தொட்டாலே
வேர்வரைக்கும் காச்சல்வரும்
வேரைத் தடவறாளே -இனி
வெளங்கின மாதிரித்தான்!

முருங்க மரமாட்டம்
மனசு ஆடுதே!
முறுக்குக் கொழாவாட்டம்
மனசப் புழியுறாளே!

மடக்கிக் கேப்போம்னா
மானத்த வாங்கிடுவா -இவகிட்ட
வாய்குடுத்து மாட்டிக்கிட்டா
வக்கீலுக்கே வக்கீல் வரணும்!

நாலூரு நடுநடுங்க
நாக்கெல்லாம் மச்சம் வாங்கி
வேலூரு ஜெயில் வரைக்கும்
வெலவெலக்க வச்சவளே

பல்லு உதிருமுன்ன
சொல்ல உதிர்த்துப்புடு
நல்ல சொல்லுன்னா
                 நாலு புள்ள பெத்துக்கலாம்!


                    ------------------ரௌத்திரன்

இளைஞருண்டு!

தாய்மொழி என்று சொல்லல்
    
தலைகுனி வாக எண்ணி
வாய்மொழி தன்னில் கூட
    
வைத்திட மறுக்கும், ஈன
நாய்களே மலிந்து விட்ட
    
நாட்டிலே தமிழை மூச்சாய்
மாய்ந்திடுங் காலம் மட்டும்
    
மதித்திடும் "அருவி" வாழ்க!

(
வேறு)

கொள்ளை யடித்து வாழ்வதொன்றே
     
கொள்கை யென்று கொண்டுவிட்ட
புல்லர் கூட்டம் வாழ்வதற்கே
     
புலர்ந்த பாதை அரசியலாய்ச்
சொல்லு கின்ற கருத்தழிய
     
சழக்கர் தம்மின் சங்கறுக்க
நல்ல தான இயக்கமொன்று
     
நாட்டு கின்ற "அருவி"வாழ்க!

(
வேறு)

காவிகட்டும் கள்வரெலாம்
       கைத்தொழும் கடவுளென்று
              ஆகி விட்டால்
நாவிலே மட்டுமுண்மை
       நாட்டுகின்ற கலையறிந்தோர்
                தலைவ ரென்றால்
ஆவதென்ன உண்டுஇங்கு?
       ஆவியது போம்வரைக்கும்
                 மக்க ளெல்லாம்
கூவியழத் தான்வேண்டும்
        கூழுமின்றி கஞ்சியின்றி
                 உண்மை யன்றோ?

நரித்தனம் புரிந்துவாழும்
        நாய்களுக்குப் பிறந்தவர்கள்
                    இந்நாள் மட்டும்
தரித்திரம் பிடித்ததுபோல்
         தமிழகத்தை ஆண்டுவந்த
                   தருத லைகள்
சரித்திரம் படைப்பமெனச்
         சுரண்டிவந்த செய்கையெலாம்
                   சந்தி தோறும்
சிரித்திடச் செயவேண்டும்
         சத்தியம் வாழவேண்டும்
                     வருக நீயே!

பாயுமின்றி படுக்கையின்றி
         பட்டபாடு யாவினுக்கும்
                  பலனைக் கேட்க
வாயுமின்றி வழியுமின்றி
         வழிகாட்ட ஒருவனின்றி
                    விழிக்கும் மக்கள்
மாயுகின்ற விதியதனை
          மாற்றவேண்டும் அவர்வாழ்வு
                     மலர வேண்டும்
பாயிரத்தை நீயெழுது
          பற்றிவர இளைஞருண்டு
                     தோல்வி யில்லை!

(
திரு. தமிழருவி மணியன் அவர்கள் காந்திய அரசியல் இயக்கம் தோற்றுவித்த போது வாழ்த்தி எழுதியது)


----------ரௌத்திரன்

Sunday 26 April 2015

ஈதுனக்கு அழகாமோ?

போதுமே எங்கள் பொன்தமிழ்க் குலத்தர்
      
பட்டபல் துயர்களும் இங்கே!
நீதமே இல்லை நீயுமே காக்கும்
      
நீண்டதோர் பொறுமையே சொன்னேன்!
ஏதமே நாங்கள் ஏதிவண் புரிந்தோம்?
      
எடுத்துநீ புகலுதல் வேண்டும்!
வேதமே கேட்டுன் செவிகளுக் கெங்கள்
      
வேதனை மொழிபுரிந் திலையோ?

கல்லினில் வடித்துக் கோவிலில் வைத்தக்
     
கணக்கதும் பிழையென வாச்சோ?
கல்லினில் வடித்தும் கடவுளாய்க் கண்ட
     
காட்சியும் பொருளிலா தாச்சோ?
கல்லென வேநீ கண்திற வாமற்
     
கிடப்பதே முடிவென வானால்
கல்லறை தனக்கும் கோவிலுக் கும்பின்
     
வேற்றுமை ஏதுள திங்கே?

அஞ்சலென் றுரைக்கும் அன்புடைக் கரங்கள்
      
அசைவினை இழந்ததும் ஏனோ?
சஞ்சல மென்றுன் சந்நிதி வந்தோம்
      
சாந்திநீ தரமறுப் பாயோ?
தஞ்சமென் றுன்றன் தாள்பணிந் திட்டோம்
      
தெய்வமே கண்திற வாயோ?
வஞ்சமில் லாரை வாட்டியே பார்த்தல்
      
வேதனே ஒருவிளை யாட்டோ?

நம்பினார்க் கெடுவ தில்லையென் றுரைத்த
     
நான்மறை நீர்த்தவோ இன்று?
வெம்பினார் நெஞ்சம் தெம்பினாற் சிரிக்க
     
விழியினாற் காண்பதும் என்று?
அம்பினாற் கொய்த ஐயிரு தலையன்
      
மீட்டுமே பிறந்துளான் இங்கே!
நம்பியாய் வந்த நாயகா உன்றன்
      
நல்லவ தாரமும் எங்கே?

வேண்டாம்,

"
தர்மமே யழிந்து தரணியின் மீதில்
      
அதர்மமே ஓங்கிடும் போது
கர்மமே முடிக்க கனிவுடன் அந்நாள்
      
கல்கியென் றுதிப்பனே, முற்றாய்ச்
சர்வமே துடைத்துச் சதுரிடு வேனஃ
      
தே,கலி யுகமுடி வென்னும்
மர்மமே" யென்றாய் மாலவா அச்சொல்
      
மெய்யென வாகிலும் நன்றே!

தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
     
தரிகிட தரிகிட வென்றே
கருகிட ஞாலம் கலங்கிடக் கோலம்
     
கண்ணனே தரித்துநீ, தீயோர்
நெறிகெட, ரத்தம் பருகிட, நல்லோர்
     
உருகிட, உருவெடுத் தே,வா!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
     
தரிகிட தரிகிட தத்"ஓம்"!    


---------ரௌத்திரன்