Sunday 20 December 2015

ஞான தரிசனம்



வெற்றுசதை மயக்கமதில்
முற்றும்மதி தானிழந்து
தக்கவிளை வெய்திவிட்டேன் நானே -தலை
சுற்றிஓய்ந்த பம்பரமாய் ஆனேன்!

வாழையிட்ட காலிடையில்
பாளமிட்ட ஓர்குழியில்
மாளுமட்டும் நான்கிடந்து தஞ்சம் -இன்று
மானம்கெட்டு விம்முகிறேன் நெஞ்சம்!

நித்திரையில் மட்டுமிங்கு
பத்தினிக ளாய்இருக்கும்
புத்திரிகள் மேனிதினம் தழுவி -இன்று
படுகுழியில் விழுந்துவிட்டேன் நழுவி!

தாளமிட்ட நெஞ்சை,கடி
வாளமிட்(டு) அடக்கிடாமல்
ஆளவிட்டுப் பார்த்திருந்தேன் நாளும் -இனி
ஓலமிட்(டு) அழு(து)என்ன லாபம்?

கொண்டுவிழி கண்டிடாமல்
கண்டுவழி சென்றிடாமல்
கண்டவழி போக்கியிரு பாதம் -வாழ்க்கை
குட்டிச்சுவர் ஆனதுதான் மீதம்!

உண்மையிலா பெண்மையதன்
மென்மையிலே ஆசைவைத்துக்
கண்மயலை வளர்ந்துவந்தேன் நாளும் -அந்தப்
புன்மையினால் வந்ததிந்த கோலம்!

தராதரங்கள் பார்த்திடாமல்
தாரமாக்கிக் கொண்டதற்குப்
பலாபலன்கள் கண்டுவிட்டேன் இங்கே -இந்தப்
பாவங்களைத் தொலைப்பதுநான் எங்கே?

தட்டுக்கெட்ட நெஞ்சமன்று
கெட்டுவிட்ட நெஞ்சமின்று
பட்டுவிட்ட பாடுகளே போதும் -இந்த
பா(டு)எந்தன் பாடைவரை வேதம்!

பாத்திரத்தின் சுத்தமது
பாலினுக்கும் என்பதுபோல்
கோத்திரத்தின் பண்பும்துளி ஒட்டும் -அதைக்
காணமறந் திட்ட(து)என் குற்றம்!

கட்டழகைக் கூட்டுமொரு
எட்டழகைக் கண்டுவந்தேன்
கற்பழகை மட்டும்காண வில்லை -அதையும்
கண்டிருந்தால் வந்திராது தொல்லை!

வேசைமகள் ஆனவளை
ஆசைமகள் ஆக்கிநெஞ்சில்
பூசைமல ராகவைத்த பாவம் -நான்
பூர்வஜென்மம் செய்தவினை ஆகும்!

யார்தகுதி என்னவென்று
பார்த்திருந்தால் பகுத்திருந்தால்
நம்தகுதி ஏன்குறையு திங்கே? -இந்த
ஞானமன்று போனதுவும் எங்கே?

தாசிகுலம் வந்தவளை
பாசிகுளம் ஆனவளை
கோவில்குளம் போலவலம் வந்து -இன்று
கண்ணீர்குளம் கட்டுகிறேன் நொந்து!

தளதளக்கும் மேனியொன்றே
தகுதியாகக் கொண்டுவிட்டேன்
குலவிளக்கை ஏற்றவரும் பெண்மை -அவள்
குலமகளா என்றுகாண வில்லை!

தேனீயான போதுமதன்
கொடுக்கினிலே விஷம்வழியும்
நானும்ரணம் பட்டதிலே இன்று -அந்த
ஞானம்தனைப் பெற்றுவிட்டேன் நன்று!

------ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.