Sunday 26 April 2015

என் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ!

வயிறொடு சேர்ந்திங்கே
உயிரது தேயுமோர்
துயரெனைத் தொடர்கின்ற பொழுதும்-நெஞ்சம்
நயமொடு கவிதைகள் எழுதும்!

பந்தங்களால்; சூழும்
சொந்தங்களால்; நாளும்
வெந்துநான் சாகவும் நேரும் - அப்போதும்
செந்தமிழ் உயிருக்குள் ஊறும்!

சுற்றிநான்கு சுவர்களன்றி
சுற்றமில்லை என்றபோதும்
கற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே
முற்றுமொரு இணையில்லா சொர்க்கம்!

திசைகளொரு எட்டும்
வசைகளையே கொட்டும்
பசையற்ற வாழ்க்கைகொண்ட போதும் - நெஞ்சில்
இசைத்தமிழ் இடைவிடாமல் மோதும்!

மெய்யிருக்கும் பலமும்
கையிருக்கும் பணமும்
மெய்யல்ல ஒருநாள் பிரியும் - ஆனால்
மலைபோலத் தமிழ்மட்டும் விரியும்!

ஓடியுழைக்கச் சக்தியின்றி
கூடுகாக்கக் கையிரண்டில்
ஓடெடுக்கும் நிலைபெற்ற பின்னும் - கவி
பாடிடுவேன் இதுமட்டும் திண்ணம்!
அணைக்கவொரு ஆளுமின்றி
துணைக்குவரக் கோலுமின்றி
தனிமைக்குள் என்னுடலின் தகனம் - நடந்தாலும்
தமிழ்க்கவிதை நெஞ்சோடு ஜனனம்!

கட்டையிது தூக்கவொரு
எட்டுக்கால் களில்லாமல்
வெட்டவெளிப் பிணமென்றும் வீழட்டும் - நான்
கொட்டுகின்ற தமிழ்மட்டும் வாழட்டும்!

பத்துமாதச் சிறைகடந்து
பலவருஷச் சிறைநடந்து
சத்தமின்றி சாகின்ற வரைக்கும் - அடி
முத்தமிழ் மூச்சோடு நுரைக்கும்!

நோவென்ற ஒன்றும்
சாவென்ற ஒன்றும்
கேவலம் உடம்புக்குத் தானடா - அதையெலாம்
கடந்தது கவியென்பது மானிடா!

காற்றை ஒத்தது
கூற்றைக் குடிப்பது
ஊற்றெடுக்கும் உள்ளத்துக் கவியே - அதற்கொரு
மாற்றில்லை மயங்குமிந்தப் புவியே!

திரையிட்டால் மறையாது
சிறையிட்டால் மரிக்காது
தரைமுட்டும் விதையின் தன்மை - என்னுள்
தகிக்கின்ற தமிழுணர்வு உண்மை!

உதிரத்தின் அணுவெங்கும்
சதிராடும் கவியுணர்வை
எதுவந்து மாய்த்திடக் கூடும்? - தமிழ்
நதியெந்த நாளுமெனில் ஓடும்!

காலத்தின் கோடோ
ஞாலத்தின் கேடோயென்
நாளத்தின் கவிதைத் துடிப்பு - அடக்க
நினைக்குமெனில் முறியுமதன் இடுப்பு!


------------ரௌத்திரன் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.